மரக்காணம், ஆக. 29: தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையோரம் சுமார் 80க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பாக தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், அரியானா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த இறால் குஞ்சுகளை அந்தப் பகுதியிலுள்ள விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் இறால் பண்ணைகள் அமைத்து வளர்த்து வருகின்றனர். இவ்வாறு பண்ணைகளில் பராமரிக்கப்படும் இறால் குஞ்சுகள் 3 மாதம் முதல் 4 மாதத்திற்குள் 50 கிராம் அளவிற்கு வளர்ச்சியடைந்து விடுகிறது. பின்னர் இந்த இறால்களை அதற்கான வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதோடு, அதனை முறையாக பதப்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு மட்டும் 60 சதவீதம்வரை இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுபோல் இறால் ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த தொழிலில் இறால் குஞ்சு பொறிப்பாக தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள், பண்ணைகளில் இறால்களை வளர்க்கக்கூடிய இடத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், இறால்களை வாகனம் மூலம் ஏற்றிச்செல்லும் ஊழியர்கள், இதனை பக்குவப்படுத்தும் தொழிலில் ஈடுபடுதல் உள்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் என சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 50% வரி விதித்த நிலையில் அமலுக்கும் வந்துள்ளது. இதனால் இறால் தொழிலில் ஏற்றுமதி செய்ய முடியாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வரி விதிப்பால் தற்போது மட்டும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறால்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இத்தொழிலில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு இந்த தொழிலை நம்பி இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த இறால் உற்பத்தி தொழில் என்பது ஒரு சங்கிலி தொடர் போன்ற தொழிலாகும். இந்த தொழிலை மேம்படுத்த அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு இறால்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் நம் நாட்டிலேயே இறால்களை அதிகளவில் விற்பனை செய்யும் வகையில் உள்நாட்டு சந்தைகளை அதிகப்படுத்த வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் இறால்களை அனைத்து பொதுமக்களும் வாங்கும் வகையில் அரசும் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல ஆந்திரா, ஒடிசாவில் உள்ளதுபோல் இறால் தொழிற்சாலை, பண்ணைகளுக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும். இறால்களுக்கான 5% ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறால்களுக்கான 12% ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள உற்பத்தியாளர்கள், இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் மட்டுமே இறால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்,. இல்லையென்றால் இத்தொழில் படிப்படியாக நலிவடைந்து, இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகலாம் என எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் இந்தியாவில் தமிழகம் பெரியளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில் மத்திய அரசு உடனடியாக இதற்கான மாற்று வழிகளை கையாண்டு இழப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
