நாகை, டிச.15: வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு1008 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதத்தில், சிவபெருமானுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம் செய்வதால், புண்ணிய பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி சோம வாரத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோயிலில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக, யாகசாலையில் சங்குகள் புனித நீர் நிரப்பப்பட்டு ருத்ரஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இதனைத்தொடர்ந்து, கடம் புறப்பாடு நடந்தது. பூஜிக்கப்பட்ட சங்குகளை சிவாச்சாரியார்கள் சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீர் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.