×

உறை பனி தாக்குதல் எதிரொலி தேயிலை தோட்டங்கள் கருகும் அபாயம்

மஞ்சூர்,டிச.15: நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் மட்டுமே உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சுமார் 7ஆயிரம் ஹெக்டர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குந்தா பகுதியில் கடுமையான பனி நிலவி வருகிறது. குறிப்பாக குந்தாபாலம், தாய்சோலை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு மற்றும் மலைச்சரிவுகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் உறைபனி கொட்டுகிறது. உறைபனியின் தாக்குதலால் இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் உள்ள தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூடுபனியின் காரணமாக தேயிலை தோட்டங்களில் கொப்புளநோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உறைபனியின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குந்தா பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டுகள், வசதி படைத்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உறைபனியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தேயிலை செடிகளின் மீது வைக்கோல் மற்றும் தாவை செடிகளை பரப்பி வைத்துள்ளனர். மேலும் உறை பனியின் தாக்கத்தால் மலை காய்கறிகள் விவசாயமும் கடுமையாக பாதித்துள்ளது. எமரால்டு, இத்தலார், நஞ்சநாடு, போர்த்தி, முத்தொரை, பாலாடா, கல்லக்கொரை சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்பகுதிகளில் உறை பனி கொட்டுவதால் விவசாய நிலங்களில் ஈரத்தன்மையின்றி வறண்டு போயுள்ளது. இதனால் பயிர் செடிகள் வாடி,வதங்கி காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகளும் காய்கறி தோட்டங்களில் ஸ்பிரிங்களர், பூவாளிகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி செடிகளை பாதுகாத்து வருகின்றனர்.

Tags : frost attack ,
× RELATED உறைபனி தாக்குதல் எதிரொலி மலர் செடிகள்...