×

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு


கோவை, டிச. 15: கோவை அரசு கலைக்கல்லூரியில் அரியர் மாணவர்களும் ஆன்லைனில் தேர்வினை எழுதலாம் எனவும், 10 வருடங்களுக்கு முன்பு படித்தவர்களும் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக்கல்லூரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது. வரும் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆய்வகங்களில் செய்முறை தேர்வுகளை மாணவர்கள் மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பருவ தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்வுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் முறையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் பத்து வருடங்களுக்கு முன்பு படித்து, தேர்ச்சி அடையாத மாணவர்கள், அந்த பாடங்களில் தேர்ச்சி அடையும் வகையில் அரியர் தேர்வினை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரியர் மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியாது.  மாறாக, தற்போது இருக்கும் புதிய பாடத்திட்டத்தின் தேர்வு எழுதலாம். இவர்களுக்கும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. அரியர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நேரடியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளலாம். எனவே, அரியர் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Aryan ,Coimbatore Government Arts College ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை