ஈரோடு, டிச.15: ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து மெயின் வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் (49). இவர், தனியார் கார்மென்ட்சில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். வாசுதேவனுக்கு ஜெயந்தி (45) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். வாசுதேவன் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஜெயந்தி டெய்லராக இருப்பதால் குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த வாசுதேவன், நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.