×

வக்கீல் கொலைக்கு பழிவாங்க பதுங்கி இருந்த ரவுடி கைது: துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


சென்னை: வக்கீல் கொலைக்கு பழிவாங்க காஞ்சியில் பதுங்கி இருந்த ரவுடி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை வில்லிவாக்கம் அருகே வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரை   7 பேர் கொண்ட கும்பல் கடந்த அக்டோபர் 5ம் தேதி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ஏற்கனவே 8  பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.  இந்நிலையில், போலீசாரின் தொடர் விசாரணையில், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட அருண்பாண்டியன், சூழ்ச்சி சுரேஷ்  ஆகியோரை கைது செய்தனர். இவர்களது, எதிர்தரப்பினரான சேரா, அவரது மகன் கதிரவன் மற்றும் தொப்பை கணேசன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். மேலும், சிறையில் இருந்து ராஜேஷ் கொலை வழக்கில் கைதான சிலர்  வெளியே வருவதை அறிந்த தொப்பை கணேசன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக தொப்பை கணேசன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்தான். இதுகுறித்து வடசென்னை கூடுதல் கமிஷனர் அருணுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில்,  புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று காஞ்சிபுரம் சென்று தொப்பை கணேசனை  துப்பாக்கி முனையில் சுற்றி  வளைத்து பிடித்தனர். அவர் இருந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் ஆறு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் அவரை எம்கேபி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், வழக்கறிஞர் ராஜேஷ் கொலைக்கு பழிவாங்க பதுங்கி இருந்ததாகவும் மேலும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரையும் தீர்த்துக்கட்ட தயாராக இருந்ததாகவும் அதற்குள்  போலீசார் தொப்பை கணேசனை கைது செய்து  விட்டதும் தெரிய வந்தது. 

Tags : Rowdy ,prosecutor ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...