கோவை, டிச. 11: கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த கிருஷ்ணகுமார் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் புதிய வேந்தராக, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் எஸ்.பி.தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இவர் நுண்ணுயிரியல் பிரிவில் டி.எஸ்.சி. மற்றும் பி.எச்.டி., எம்.டி ஆகிய பட்டங்கள் பெற்றவர். தேசிய அறிவியல் அகாடமி மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமிக்காக கவுரவ உறுப்பினராக, கல்வி சேவை வழங்கியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் இருந்து சுமார் ரூ.50 கோடி நிதி பெற்று 60 திட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். 347 ஆய்வு கட்டுரைகள், 20 நூல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் நேற்று அவினாசிலிங்கம் பல்கலைக்கத்தின் புதிய வேந்தராக பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கவுசல்யா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.