புதுச்சேரி, டிச. 11: புதுச்சேரியில் நேற்று புதிதாக 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 1,570 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை- 12, காரைக்கால்- 6, மாகே- 6 என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூர் விவி நகரை சேர்ந்த 45 வயது ஆண், லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த 72 வயது முதியவர் ஆகிய இருவரும் ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 617 ஆகவும், இறப்பு விகிதம் 1.65 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37,363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.