×

பாஜ-அதிமுக கூட்டணியை தொண்டர்களே ஏற்கவில்லை தமிழ்நாட்டில் திமுகவிற்கு யாரும் போட்டி கிடையாது: அமித்ஷாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

நெல்லை: தமிழகத்தில் யாருமே திமுகவிற்கு போட்டி கிடையாது. பாஜ- அதிமுக கூட்டணியை அவர்களது தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என நெல்லையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார். நெல்லையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி: நெல்லையில் நடந்த பாஜ கூட்டத்தில் அமித்ஷா திமுகவை வேரோடு பிடுங்கி அகற்றுவோம் என சொல்கிறார்.

விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும். 15 ஆண்டுகளாக பாஜ வேரோடு பிடுங்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. வருங்காலத்திலும் திமுக தான் வெற்றி பெறும். நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். தமிழகத்திற்கு இதுவரை அமித்ஷா மூன்று முறை வந்து விட்டார்.

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். எடப்பாடி எப்போதும் தனித்து ஆட்சி என்கிறார். இதற்கு அமித்ஷாவும் விளக்கம் சொல்லவில்லை. எடப்பாடியும் விளக்கம் சொல்லவில்லை. அதிமுக- பாஜ கூட்டணியை அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்கவில்லை. இதை வைத்து அவர்கள் நாங்கள் ஜெயிக்கப்போகிறோம் என சொல்கிறார்கள்.

பொதுமக்கள், மகளிர் போன்றோர் மிகப்பெரிய ஆதரவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தந்து வருகின்றனர். எம்ஜிஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை தாண்டி இப்போது முதல்வருக்கு அவர்களது ஆதரவு பெருகி வருகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்.  தமிழ்நாட்டில் திமுகவிற்கு போட்டியே கிடையாது. எதிரில் யார் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Tags : BJP-AIADMK ,DMK ,Tamil Nadu ,Minister ,K.N. Nehru ,Amit Shah ,Nellai ,Municipal ,Administration ,Municipal Administration Minister ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...