×

செய்யாறு காவல் நிலையம் அருகில் ஒரே இரவில் 3 கோயில்களில் திருட்டு மர்ம ஆசாமிகள் துணிகரம்

செய்யாறு, டிச. 11: செய்யாறு காவல் நிலையம் அருகில் ஒரேநாள் இரவில் 3 கோயில்களில் மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் காவல் நிலையம் எதிரே, வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி வேல்முருகன் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து கோயில் பூட்டு உடைத்த மர்மநபர்கள், அங்கிருந்த எவர்சில்வர் உண்டியலை பணத்துடன் திருடிச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செய்யாறு டவுன் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதேபோல் செய்யாறு போலீஸ் நிலையம் பின்புறம் புதிய தெரு, மெயின்ரோடு குடியிருப்பு பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோயிலில் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அருகிலுள்ள திருவத்தூர் வலம்புரி விநாயகர் கோயிலிலும் பூட்டு உடைத்த மர்ம ஆசாமிகள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர்.

இதுதவிர போலீஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோயில், செய்யாறு வழூர்பேட்டை பட்சீஸ்வரர் கோயில்களில் பூட்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்யாறு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே அடுத்தடுத்த 5 கோயில்களில் பூட்டு உடைத்த மர்மநபர்கள் 3 கோயில்களில் உண்டியல், பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : assailants ,temples ,police station ,Seiyaru ,
× RELATED அரசு பஸ் மீது கல்வீச்சு; 3 பேர் கைது