- யூனியன் அரசு
- பாஜக
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- கே. ஸ்டாலின்
- யூனியன் மற்றும் மாநில உறவுகள் தொடர்பான தேசிய
- சென்னை கலைவனார் அரினா
- முதல் அமைச்சர்
சென்னை: பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கை மாநில அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் தத்துவத்தை எடுத்துக் கூறிய கனியன் பூங்குன்றனார் வாழ்ந்த மண் இது.
அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதே சமூக நீதிக்கு கோட்பாடாகும். தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டை பின்பற்றி பல முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தமிழ்நாட்டில் பல முற்போக்கான சட்டங்களுக்கு வழிவகுத்தது திராவிட இயக்கம்தான். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு பல துறைகளில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஈட்டித் தரும் வரி வருவாய்க்கு ஏற்ப ஒன்றிய அரசு நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை.
ஒன்றிய அரசு குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஜனநாயக விரோத கூட்டாட்சி நடவடிக்கைகளுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கையை திமுக கண்டிக்கும். மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படல் கூடாது. ஒன்றிய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் பல அதிகாரங்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை வெளி வந்த பிறகும் ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர்களை ஆலோசித்து ஆளுநர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்புதான் இருக்கிறது; அதிகாரப் பகிர்வு இல்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை தற்போது பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் மொழி உரிமை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. மராட்டியம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளன. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் நாட்டின் பன்முகத்தன்மையை வலுப்படுத்தும். மாநில உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது என்று கூறினார்.
