×

அறந்தாங்கி அருகே இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்துசெல்லும் அவலம்

அறந்தாங்கி, டிச.11: அறந்தாங்கி அருகே இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குழிக்காடு கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் யாராவது இறந்து போனால் இறந்தவர்களின் உடலை விளைநிலங்கள் வழியாக மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது பயிர்களை மிதித்துக்கொண்டு செல்வதால் சேதம் ஏற்படுகிறது.இந்த நிலையில் கருங்குழிக்காடு கிராமத்தில் இறந்த காமாட்சி (60) என்ற மூதாட்டியின் உடலை விளைநிலங்களை வழியாக பயிர்களை மிதித்துவாறே மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இவ்வாறு சடலத்தை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்வதால் பயிர்கள் சேதமாகின்றன. மேலும் நீண்ட தூரம் சடலத்தை வயல்வெளியில் தூக்கி செல்வோர் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்டபோது, கிராமசபை கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் மயானத்திற்கு சாலை வசதி அமைத்து கொடுக்க முன்வரவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.மயானத்திற்கு செல்ல சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே கருங்குழிக்காடு கிராம மக்களின் கோரிக்கையாகும்.

Tags : deceased ,Aranthangi ,field ,
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா