திருச்சி, டிச.10: தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் மாநாடு மற்றும் கிறிஸ்துமஸ் கூடுகை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தலைமை நிலையம் அருகேயுள்ள தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு திருச்சியை தலைமையிடமாக கொண்ட டி.இ.எல்.சி. தரங்கை பேராயர் டேனியல் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 148 ஆயர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது: மறைந்த முன்னாள் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை, சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக உயர்த்திய பெருமை, திருச்சி மாநகர மக்களையும், கிறிஸ்தவ மக்களான உங்களையும் சாரும். தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார். இதில் கலந்துகொண்ட ஆயர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் கேக்குகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, பூபதி மற்றும் வெஸ்லி, ஆரோக்கிய சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.