திருச்சி, டிச.10: திருச்சி எம்.பி., சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாளான நேற்று 300 ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலையை எம்பி., அலுவலகத்தில் தமிழக சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் வழங்கினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 74வது பிறந்தநாளை காங்கிஸ் தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரில் மத்திய அரசின் வேளான் திருத்த சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் கடந்த 14 நாட்களாக கடும் துயரில் வாடிக்கொண்டிருக்கும்போது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து திருச்சியில் எம்பி அலுவலகத்தில் நடக்கவிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்துசெய்து விட்டு ஏழை எளியோருக்கு உதவிட திருநாவுக்கரசர், கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று நேற்று காலை 11 மணியளவில் திருச்சி எம்பி., அலுவலகத்தில் 300 ஏழைகளுக்கு இலவச வேட்டிகள், சேலைகள் வழங்க பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் உடனடி ஏற்பாடுகளை செய்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏஐசிசி சந்திரன், பெனட் அந்தோணிராஜ், பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, வக்கீல் சரவணன், இளைஞர் காங்கிரஸ் ரங்கம் ஜெயம் கோபி, உறையூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலா, கிருஷ்ணா, பிரேம், மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.