×

கொள்ளிடம் பகுதியில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

கொள்ளிடம், டிச.10: கொள்ளிடம் பகுதியில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள அளகுடி, நாணல்படுகை, முதலை மேடுதிட்டு, மாங்கநாம்பட்டு, குத்த வக்கரை, சோதியகுடி, சிதம்பரநாதபுரம், மாதிரவேலூர், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, பூங்குடி, கீழவாடி, சரஸ்வதி வளாகம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 300 குடிசை வீடுகள் சுவர்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. சரஸ்வதி வளாகம் கிராமத்தில் மட்டும் 6 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் குடிசை வீடுகளில் வசித்தவர்கள் தற்போது, குடியிருக்க வசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களின் உறவினர் வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வீடுகளை இழந்த அனைவருக்கும் உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். அரசு கான்கிரீட் வீடு உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : homes ,area ,Kollidam ,rains ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி