வேதாரண்யம்,டிச.10: வேதாரண்யம் தாலுகா அண்ணா பேட்டை ஊராட்சி இராசான் கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு தனியார் பள்ளிக்கு இணையாக இந்தப்பள்ளி சிறந்து விளங்கி வருகிறது. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த ஆண்டு 70 மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து உள்ளனர்.
இப்பள்ளிக்கு 2019-2020 கல்வி ஆண்டிற்கான சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான விருதினை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வழங்கியுள்ளனர். இந்த விருதினையும் அதற்கு அறிவித்த ரூ.50,000 ரொக்கத்தையும் நாகை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கல்வி அலுவலர் உஷா சாந்தாஜாய், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன், பள்ளித் தலைமையாசிரியர் மரகதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் தனபாலன் மற்றும் பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் கலந்து கொண்டனர்.