அரவக்குறிச்சி, டிச. 10: அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ சேவை மையம் மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழுந்த நிலையில் இருப்பதால் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் அச்சமடைந்துள்ளார். உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்ப்யூட்டர்கள் பழுதாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இ சேவை மையம் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு சான்றிதழ்கள், ஆதார் திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக நூற்றுக்கணக்கானோர் தினமும் வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இ சேவை மையத்தில் மேற்கூரை மழை நீரில் ஊறி இடிந்து சிமென்ட் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அதிலிருந்து மழை நீர் வெளிப்பட்டு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்ட விலையுயர்ந்த சாதனங்கள் பழுதடைத்து பதியப்பட்டுள்ள லட்சக்கணக்கான டேட்டாக்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கூரை இடிந்த நிலையில் இருப்பதால் பணிபுரியும் ஊழியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து ஊழியர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவல நிலை உள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்காக வரும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.