பரமக்குடி, டிச.10: ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர் முதல் தனுஷ்கோடி வரை 240 கி.மீ தொலைவிற்கு சாலையோர சோலை திட்டத்தின் கீழ் மரக் கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் இத்திட்டத்தினை கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 240 கி.மீ தொலைவிற்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் மூலம் வேம்பு, புங்கை, புளி என 17 வகையான 70 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துவக்க விழாவில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், பிடிஓ தாமரைச்செல்வி, பிடிஓ (கிராம ஊராட்சி) சந்திரமோகன், அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா சிவகுமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.