கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கியில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில், 810ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு பைரவருக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ ஹோமம், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பைரவர் விழாவிற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோயிலில் நடந்த பைரவர் ஜெயந்தி விழாவில், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சூரன்குட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.