×

தாழம்பூர் , சிறுசேரியில் வடியாத மழைநீர்: எம்.பி., எம்.எல்.ஏ ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய தாழம்பூர் மற்றும் சிறுசேரி ஊராட்சிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த வாரம் வீசிய நிவர் புயல் மற்றும் புரெவி புயல் ஆகியவற்றின் காரணமாக தொடர் மழை பெய்தது. இதனால் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அவற்றிற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கின. தற்போது மழை விட்டும் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுக்க முடியாமல் கனரக வாகனங்களை பயன்படுத்தி உள்ளே சென்று வருகின்றனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் ஆகியோர் நேற்று தாழம்பூர் மற்றும் சிறுசேரி ஊராட்சிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். காந்தி நகர் குடியிருப்பு, காசா கிராண்ட், எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் குடியிருப்புகள் மற்றும் கிராம மக்கள் குடியிருப்பு களை பார்வையிட்ட அவர் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வின்போது தாழம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், சிறுசேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், நாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்டத் துணை செயலாளர் அன்புச்செழியன், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Siruseri ,MLA ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...