திண்டுக்கல், டிச. 9: சித்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்க மயக்கவியல் நிபுணர்களும், அறுவை சிகிச்சைக்கு பின்பு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மருத்துவத்திற்கும், அலோபதி மருத்துவர்களையே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் சித்த மருத்துவர்களும், அலோபதி மருத்துவர்களும் இணைந்து கலப்பு சிகிச்சை அளிப்பது சாத்தியமில்லாத சூழ்நிலை என்றும், பொது மக்களின் உயிரோடு விளையாடும் இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் அலோபதி மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகிக்க, டாக்டர்கள் கோடீஸ், நாகராஜன், வெங்கடேசன், ஆனந்த் யோகேஷ், ராமச்சந்திரன், ஷேக், சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். இதில் பெண் டாக்டர்கள் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பழநி அரசு மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க தலவர் குணசீலன், செயலாளர் பிரேம்சந்த் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.