×

தீபாவளிக்கு பிறகு உள்நாட்டு ஆடை உற்பத்தி ஆர்டர் அதிகரிப்பு

திருப்பூர், டிச.9: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பின்னலாடை உள்நாட்டு உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஏற்றுமதி வர்த்தகம் எந்த அளவில் உயர்ந்து இருந்ததோ, அதே அளவில் உள்நாட்டு தயாரிப்புகளாக உள்ளாடை, வெளியில் அணியும் ஆடை வர்த்தகம் திருப்தியாக இருந்தது. கொரோனாவால் மார்ச் மாத இறுதியில் தொழில்கள் முடங்கின. பிற மாவட்ட, மாநில தொழிலாளர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ெபாருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அரசு அறிவித்த சில சலுகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஓரளவு பாதுகாப்பு அளித்தது. கடந்த மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை படிப்படியாக தளர்வின் பேரில் மீண்டும் பின்னலாடை தொழில் தொடங்க ஆரம்பித்தது.

செப்டம்பர் மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுடன் தொழில் இயங்க ஆரம்பித்தது. தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பொருளாதார தன்னிறைவு அடைய மேலும் 6 மாதம் ஆகலாம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஓரளவு ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வெளியில் அணியும் ஆடை ஆர்டர் அதிகமாக வருகிறது. அரசு அறிவிக்கும் சலுகைகள், கடன்கள் மூலமும் தொழிலாளர்களது ஒத்துழைப்பும் இருந்தால் பின்னலாடை உற்பத்தி இன்னும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதேசமயத்தில், தொழில் நிறுவனங்கள் கடன்களில் இருந்து மீளவும், தொழிலாளர்கள் வருவாய் கூடவும் நம்பிக்கையான வாய்ப்பு உருவாகும்.

Tags : Deepavali ,
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!