ஈரோடு, டிச. 9: கீழ்பவானி பாசன தந்தை ஈஸ்வரனுக்கு நினைவு தூண் அமைக்காவிட்டால் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விவசாயிகள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பவானிசாகர் அணை கட்டுவதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர் ஈஸ்வரன். இவர் 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது, பவானிசாகர் அணையை கட்ட வேண்டும் என்று அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததையடுத்து அரசு சம்மதம் தெரிவித்து அணை கட்டப்பட்டது. இதையடுத்து அணை உருவாக காரணமான ஈஸ்வரனுக்கு அணை வளாகத்தில் நினைவுத்தூண், மணி மண்டபம் ஆகியவை கட்டப்பட வேண்டும் என்பது கீழ்பவானி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் தமிழக அரசு இக்கோரிக்கையை நிராகரித்து வருகிறது.