×

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் 9,100 போலீசார் தீவிர கண்காணிப்பு: முதல்வர் கொடி ஏற்றும் புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் 9,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்றும் புனித ஜார்ஜ் கோட்டை பகுதியில் துப்பாக்கி ஏந்திய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) நாட்டின் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், லாட்ஜிகள், ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள் என அனைத்து இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வாகன சோதனை மற்றும் டிரோன்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், கார்த்திகேயன், பிரவேஷ் குமார் ஆகியோர் மேற்பார்வையில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகன தணிக்கைகள், முக்கிய இடங்களில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,79th Independence Day ,Fort St. George ,Chief Minister ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...