×

வெம்பக்கோட்டையில் 3 ஏக்கர் இடத்தில் 18 குழிகள் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நாளை ஆரம்பம்: மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்கிறார்

ஏழாயிரம்பண்ணை, ஏப். 5: தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு பணிகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் நுண்கற்கருவிகள், சங்கக்கால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை அடங்கும். இவை கி.மு.4000 முதல் கி.மு.3000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்குமென தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளுக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி தமிழ்நாடு தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த மேகநாதரெட்டி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில், நுண்கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. அதன்படி, சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள், காதணிகள், சிறு பானை, சுடு மண்ணாலான தொங்கட்டான், வளையம், தந்தத்தாலான தொங்கட்டான், செவ்வந்திக்கல், கை கோடரி, சூது பவளமணி, அரவைக்கல், தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, ஆண் உருவம்,சுடுமண்ணாலான சங்கக்கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் என 3000 வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இது ஆய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது முதல் கட்ட ஆய்வானது கடந்த செப்.30-ம் தேதியுடன் நிறைவுபெற்று ஆய்வின் முடிவின், கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் யாவும் ஆவணப்படுத்தப்பட்டு காலப்பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான இடத்தினை அகழாய்வு பணி இயக்குனர் தேர்வு செய்ததை தொடர்ந்து அகழய்வு பணிகள் எப்போது தொடங்கும் என அகழ்வாராய்ச்சி பணியாளர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கான ஒப்புதல்களை ஒன்றிய அரசு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை பிப். 22 ல் தொல்லியல் துறையினர், வருவாய் துறையினருடன் அளவீடு செய்து சுத்தம் செய்யப்பட்டது. புதிதாக 18 குழிகளில் ஆய்வு செய்ய அளவீடு செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கான பணிகள் (நாளை)ஏப்.6ம்தேதி தொடங்கவிருப்பதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வெம்பக்கோட்டையில் 3 ஏக்கர் இடத்தில் 18 குழிகள் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நாளை ஆரம்பம்: மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Vembakkottai ,District Collector ,Ajayarampannai ,Tamil Nadu Keezadi ,Sivalagi ,Mayiladumbarai ,Gangaikonda Cholapuram Virudhunagar District Vembakottai ,Tirunelveli District Tulukkarpatti ,Vembakottai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...