×

திருச்சியில் பணத்துடன் வாலிபர் கடத்தல் 3 பேர் அதிரடி கைது

திருச்சி, ஏப்.5: திருச்சியில் பணத்துடன் வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள கும்பலை தனிப்படை போலீசார் தேடுகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், திருச்சியை சேர்ந்த சாதிக்பாட்ஷா தனது சகோதரர் சாதிக்பாஷா மற்றும் நண்பர் ஜூபேர் ஆகியோருடன் திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 12 மணிக்கு காரில் சென்று விட்டு, நள்ளிரவு 1.45 மணியவில் புத்துார் ஆபீசர் காலனி வழியாக மூலக்கொல்லை தெருவில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 5 நபர்கள் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் புத்தூர் ஒய்.எம்.சி.ஏ நர்சரி பள்ளி பகுதியில் காரை வழிமறித்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி சாதிக்பாட்சாவை அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து, அவர் வைத்திருந்த ரூ.3 லட்சம் மற்றும் 20 கிராம் எடையுள்ள 2 பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்து கொண்டு சாதிக்பாட்சாவை கடத்தினர். சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து, மர்ம நபர் ஓருவரை பிடித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரனையில், சிக்கியவர் கதிரேசன்(21) என்பது தெரிந்தது. தொடர்ந்து, கதிரேசன் கைது செய்யப்பட்டார்.

மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட சாதிக்பாட்ஷாவை 4 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையால், ஏப்.3ம் தேதி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்த ஹக்கிம் ஜியாவுதீன்(36) மற்றும் அப்துல்கபூர்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவு கும்பலை தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இந்த வழக்கில், சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படை போலீசாரை மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா பாராட்டினார்.

The post திருச்சியில் பணத்துடன் வாலிபர் கடத்தல் 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...