பொன்னமராவதி,ஏப்.5: பொன்னமராவதி அமரகண்டான் குளம் ரூ.1.39 கோடியில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியின் பெரிய நகரமாக பொன்னமராவதி விளங்குகிறது. இங்கு பொழுபோக்குவதற்கு எந்த இடமும் இல்லை. இங்கு புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கூடும் பகுதியாக உள்ளது. பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அமரகண்டான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்குபுறம் காவல்நிலையம், சிவன்கோயில், பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது.
தெற்குப்புறம் பட்டமரத்தான் கோயில், பத்திர பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தபால்நிலையம், நூலகம், பெட்ரோல் பங்கு, கிழக்குப்புறம் வருவாய்ஆய்வாளர் அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் என நான்கு புறமும் முக்கிய அலுவலகம், கோயில்கள் என உள்ளது. இப்பகுதி ஒரு சிறப்பு மிக்க பகுதி. இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. மேலும் ஊரின் மையப்பகுதியில் அழகாக இருக்கவேண்டிய குளம் தூய்மையற்ற நிலையில் உள்ளது. இந்த குளத்தை சீர் செய்து நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இப்பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லை.
எனவே இந்த குளத்தைச்சுற்றி பூங்கா அமைத்து நடைபயிற்சி பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையினை கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அமைச்சர் ரகுபதி இதனை செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான ரகுபதி இந்த குளத்தை மேம்பாடு செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி இந்த அமரகண்டான் குளக்கரைகளில் பேவர் பிளாக் அமைத்து நடைபாதை அமைக்க ரூ.1.39 கோடி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து இந்த நிலையில் இந்த குளம் மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே மழை வந்துவிட்டது. குளத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டிருந்தது. இந்த மழையினால் மீண்டும் தண்ணீர் வந்து விட்டது. தற்போது மழை இல்லை. இதனால் தண்ணீர் எடுக்கப்பட்டு மண்வெட்டப்பட்டு மேம்பாடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் பணி முடிந்து கரைகளில் கல்பதிக்கப்பட்டு பேவர் பிளாக் அமைத்து பூங்கா அமைக்கப்படும். இந்த குளத்தின் அளவினை குறைத்து பணிகள் நடைபெறவில்லை. குளத்தின் அளவு குறைக்காமலே அனைத்துப்பணிகளும் நடைபெற்று பொன்னமராவதி நகரின் அழகு பகுதியாக இந்த பகுதி உருவாக்கப்படும் என பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
The post பொன்னமராவதியில் ரூ.1.39 கோடியில் அமரகண்டான் குளம் சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.