×

குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு முகாம் நிறைவு விழா திருச்சி தேசியக்கல்லூரியில் நடந்தது

திருச்சி, டிச.7: 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் என்எஸ்எஸ் தொண்டர்களின் தென் மண்டல அளவிலான தேர்வு முகாம் திருச்சி தேசியக் கல்லூரியில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் நடைபெற்றது. இத்தேர்வு முகாமின் நிறைவு விழா நேற்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தலைமை வகித்தார். தென் மண்டல என்எஸ்எஸ் அலுவலர் சாமுவேல் செல்லையா, முகாம் குறித்து பேசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 200 மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை காமராசர் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பின் தமிழக இயக்குநர் நட்ராஜ், தமிழக என்எஸ்எஸ் அலுவலர் செந்தில்குமார், காமராசர் பல்கலை பேராசிரியர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக கவுகாத்தி மண்டல என்எஸ்எஸ் அலுவலர் தீபக்குமார், ராஜஸ்தான் மண்டல என்எஸ்எஸ் அலுவலர் பட்நாகர் ஆகியோர் அணிவகுப்பில் பங்குபெறும் என்எஸ்எஸ் மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். கல்லூரி துணை முதல்வர், என்எஸ்எஸ் அலுவலர் பிரசன்னபாலாஜி நன்றி கூறினார்.

Tags : closing ceremony ,selection camp ,NSS ,Republic Day ,parade ,Trichy National College ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்