காரைக்குடி, டிச.7: காரைக்குடி ராமனாதன் செட்டியார் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் விளையாட்டு திடல் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காரைக்குடி நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பை ஊற்று, ரஸ்தா உரக்கிடங்கு, தேவகோட்டை குப்பை கொட்டும் இடம், துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டார். ராமனாதன் செட்டியார் பள்ளியில் நடந்து வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் தேவை உள்ளதால் ஏற்கனவே உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக மேலும் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட உத்தரவிட்டார். பள்ளிக்கு தேவையான விளையாட்டு திடலுக்கு தேவையான இடம் தொடர்பாக தாலுக்கா அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தை பார்வையிட்டார். கூடுதல் வகுப்பறை மற்றும் விளையாட்டு திடல் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ரெங்கராஜூ, நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர் நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பாலு உள்பட பலர் உடன் இருந்தனர்.