×

கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு; தாலுகா அலுவலகத்தில் கார், ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு: சைக்கோ நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கண்டாச்சிபுரம், டிச. 7: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி இருந்த கார் மற்றும் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி தாலுகா அலுவலக முன்பக்கம் மற்றும் பின்பக்க 13 ஜன்னல் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்தனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் விஏஓ சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் கண்டாச்சிபுரம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை செய்தனர்.

அப்போது தாலுகா அலுவலகத்தில் சிசிடிவி கேமரா இல்லாததாலும் வாட்ச்மேன் நியமிக்கப்படாததாலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுவரையில் மர்ம நபர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வட்டாட்சியரை வீட்டில் விட்டு விட்டு தாலுகா அலுவலகத்தில் காரை நிறுத்திவைத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை அலுவலக ஊழியர்கள் தாமதமாக அலுவலகத்தை திறந்துள்ளனர். அப்போது,  தாசில்தாரின் கார் கண்ணாடி மற்றும் 4 ஜன்னல் கண்ணாடிகள் செங்கற்களால் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விஏஓ சின்னதுரை மற்றும் தாசில்தார் கார்த்திகேயன் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அங்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். இதில் தாலுகா அலுவலகத்தில் எவ்வித பொருட்களும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்து கண்ணாடிகளை உடைத்த சைக்கோ மர்ம நபர்களை கண்டாச்சிபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  தாலுகா அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரையில் தாலுகா அலுவலகத்தில் சிசிடிவி கேமரா அமைக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : office ,persons ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...