×

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நீர் வடியாததால் 300 கிராம மக்கள் தவிப்பு: முகாம்களில் 1 லட்சம் பேர் தஞ்சம்

கடலூர், டிச. 7: கடலூர் மாவட்டத்தில் மழை சற்று குறைந்தாலும் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில்  சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. சுமார் 1.5  லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஒரு லட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த கன மழை காரணமாக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் கடந்த 3ம் தேதி ஒரே நாளில் 34 செமீ  மழை பெய்ததால் நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், கீழவன்னியூர், நடுத்திட்டு, நந்திமங்கலம்,  பிள்ளையார்தாங்கல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் செல்வதால் அக்கரைஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், மேலகுண்டலவாடி உட்பட 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பெருமாள் ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பால் ஆடூர்அகரம், பூவாணிகுப்பம், தீர்தனகிரி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், என்எல்சி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொளக்குடி,

கல்குணம், மதுவானைமேடு, கரிவெட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமம் உள்பட மாவட்டம் முழுவதும் 300 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. நேற்று காலை முதல் மழை குறைந்துள்ளதால் பெருமாள் ஏரி, வீராணம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மழை சற்று குறைந்ததால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் அளவு குறைந்ததால் கடலூர்-சிதம்பரம், வடலூர்-கும்பகோணம் போக்குவரத்து துவங்கியுள்ளது. மாவட்டத்தில் கொளக்குடி, குறிஞ்சிப்பாடி, குமராட்சி, சர்வராஜன்பேட்டை உட்பட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள  முகாம்களில் சுமார் 1 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொளக்குடி, கல்குணம், ஒணான்குப்பம், ஆடூர்அகரம் உட்பட பல கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கன மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. நேற்று காலை முதல் மழை சற்று குறைந்துள்ளது, ஆனாலும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இதனால் வெள்ளநீர் சூழ்ந்துள்ள 300 கிராம மக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும் போதிய இட வசதி இல்லாததால் இரவில் தூங்க முடியாமலும்,

அடிப்படை தேவைகளுக்கும் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பல கிராமங்களில் சரியான நிவாரண உதவிகள் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடு  போன்ற கால்நடைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை.  வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் வெள்ள நீர் வடிய இன்னும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : floods ,Cuddalore district ,camps ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!