நித்திரவிளை,டிச.7: கொல்லங்கோடு அருகே மொபட்டில் கஞ்சா கடத்திய பெண் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொல்லங்கோடு அருகே அணுக்கோடை சேர்ந்தவர் ராணி என்ற ஆட்டோராணி (46). பிரபல கஞ்சா வியாபாரி. கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதில் கைதேர்ந்தவர். கேரளாவில் கஞ்சா வழக்குகள் உள்ளன. தமிழக போலீசார் ராணியை பிடிக்க பலமுறை முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஊரம்பு சந்திப்பில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ராணி வந்து கொண்டிருந்தார். போலீசார் ராணியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மொபட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதில் இருந்த 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.