கரூர், ஆக. 8: கரூர் ரத்தினம் சாலையோரம் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கருர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை போன்ற பகுதிகளில் வசிக்கும் சிலர் அதிகளவு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாத காரணத்தினால், ஆடுகள் அனைத்தும் சாலையின் குறுக்கே செல்வது இந்த பகுதியில் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்து ரத்தினம் சாலை, ஐந்து ரோடு, பசுபதிபாளையம், வாங்கல், நெரூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும், ரத்தனம் சாலையை தாண்டியதும் ரயில்வே நிலைய வளாகம் உள்ளது. எனவே இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கால்நடைகள் நடமாட்டம் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும், சில சமயங்களில் இதுபோன்ற காரணங்களால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க தேவையான விழிப்புணர்வுகளை உரிமையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
