×

நீலகிரி மலை ரயில் தனியார்மயம்?

கோவை,நவ.7: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மலையை குடைந்து நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் ஊட்டி ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது.   மிக முக்கியமான சுற்றுலா மலை பாதை என்பதால் இதற்கு யுனஸ்கோவின் விருதை பெற்றுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் இதன் வழித்தடத்தில் சிறப்பு ரயிலும் கட்டணம் அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது. சுமார் 4.5 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கட்டணம் செலுத்தி சிறப்பு ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து  பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில்வே துறையே இயக்க வேண்டும் என தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக மலை ரயில் சேவையும், சிறப்பு ரயில் கட்டண சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது வரை உதகை செல்ல இ பாஸ் நடைமுறை இருந்து வருகின்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணத்தை செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார். மலை ரயிலில் பயணிக்க  நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள்,  விமானத்தில் பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளனர். இதுஒருபுறமிருக்க ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள்  எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேலும் ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலைரயில் இதுவரை சேவை இதுவரை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவை மட்டும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது.

கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டு இருப்பதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில்  தாரைவார்க்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.

இந்த மலை ரயில் தனியார்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுவதாக தெரிகின்றது. இந்த ரயிலில் முகப்பு முகப்புத் தோற்றம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களின் உடைகளும் முழுவதுமாக காவி நிறத்தில் வடிவமைக்க பட்டிருக்கிறது.இது ஒரு இந்துத்துவா அமைப்பின் ரயில் போல காட்சி அளிக்கிறது. இதை தொடர்ந்து கட்டணமாக ஒரு நபருக்கு 3 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விழாக்காலங்களில், கோடைகாலத்தில் இந்த கட்டணம் பல ஆயிரங்கள் உயரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் நூறு ஆண்டுகள் கண்ட இந்த மலை ரயிலில் பயணம் செய்யவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

உடனடியாக தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து , அரசே இந்த ரயிலை இயக்க வேண்டும். ஏழை , எளிய மக்களும் பயணம் செய்கின்ற வகையில் கட்டணங்கள் இருக்க வேண்டும. இப்போது இருக்கின்ற இந்த நிலை நீடித்தால் தந்தை பெரியார் திராவிட கழகம் எதிர்த்து போராட்டம் நடத்துவோம்’ என கூறினார்.

Tags : Nilgiri Mountain Railway Privatization ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்