×

பாபர் மசூதி இடிப்பு தினம் எஸ்.டி.பி.ஐ, தமுமுக ஆர்ப்பாட்டம்

கோவை,டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோவை ஆத்துப்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.சார்பாக ஆத்துப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.  இதில், மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மற்றும் கோவை செய்யது ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசே, நீதித்துறையே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ நடைமுறைப்படுத்து, பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், தெஹ்லான் பாகவி பேசுகையில் “பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில், முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதை மறக்காமல் இருக்கவும், வருங்கால தலைமுறைகளுக்கும் பாபர் மசூதியின் வரலாற்றை எடுத்துக்கூறவும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி எழுப்பும் வரை நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தினத்தில் நாடு முழுவதும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இழந்ததை மீட்கவும், இருப்பதை காக்கவும் உறுதியுடன் போராடுவோம்” என்றார். இதே போல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்,  மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட செயலாளர் ஜெம்பாபு, பொருாளர் அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தபெதிக பொது செயலாளர் ராமகிருஷ்ணன், விசிக மண்டல அமைப்பு செயலாளர் சுசி.கலையரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Babri Masjid Demolition Day STPI ,Tamumuka Demonstration ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு