ஈரோடு, டிச. 7: ஈரோடு பெருந்துறை ரோட்டில் அபிராமி கிட்னி கேர் மற்றும் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை செயல்படுகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற இம்மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, சிறுநீரகம் தானமாக பெற்று நோயாளிகளுக்கு பொருத்தி வருகிறது. இதில் மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை பெற்று, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 67 வயது முதியவருக்கு, டாக்டர் சரவணன் தலைமையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்தனர்.
இது குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது: மதுரையில் மூளைச்சாவு அடைந்த 61 வயது முதியவரின், சிறுநீரகத்தை தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பு மூலம் பெறப்பட்டு, மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டு, எங்களது அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட, 67வயது ஆண் நோயாளிக்கு, எனது தலைமையில் மருத்துவ குழுவினர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பொதுவாக 50 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மாற்றும் வகையில் 67வயது முதியவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.