புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஒன்றாக புழல் ஏரி திகழ்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் 2,878 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது, விநாடிக்கு 540 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 188 கன அடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. அதில் தற்போது 19.33 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை பெய்தால் புழல் ஏரி நிரம்பி, அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.