×

விவசாய பம்பு செட்டுகளை உடைத்து மின் மோட்டார், காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே விவசாய பம்பு செட்டுகளின் பூட்டுகளை உடைத்து மின் மோட்டார், காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சி துலங்கும் தண்டலம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் கிணறு அமைத்து, பம்ப் செட்டுகள் அமைத்து பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை விவசாய நிலங்களுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், வரதராஜன் என்ற விவசாயியின் பம்பு செட் பூட்டை உடைத்து மின் வயரை துண்டித்து, பம்பு செட்டில் வைத்திருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 10 ஹெச்பி மோட்டார், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்கள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பீஸ் கேரியர் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.

அதேபோல், விவசாயிகள் பாலு, இந்திரா, ஜெயா ஆகியோரின் பம்பு செட் பூட்டுகளையும் உடைத்து, மின் வயர்களை துண்டித்து அதிலிருந்த காப்பர் கம்பிகளையும், பீஸ் கேரியர்களையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்று காலை விவசாய நிலத்துக்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயத்துக்கு மிகவும் அவசியமான மின் வயர்களை துண்டித்து பீஸ் கேரியர்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றதால், அறுவடைக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயி வரதராஜன் கூறுகையில், பல விதமான சிக்கல்களுக்கு மத்தியில் கடனை வாங்கி பயிரிட்டு வரும், எங்களை போன்ற விவசாயிகளின் நிலங்களில் உள்ள மோட்டார்களையும், பீஸ் கேரியர்களையும், காப்பர் வயர்களையும் திருடி சென்றால், நாங்கள் எப்படி விவசாயம் தொடர்ந்து செய்ய முடியும், வேறு வேலை தெரியாததால் கடன் வாங்கி, இந்த விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகின்றோம். இப்படிப்பட்ட நிலையில், விவசாய பொருட்களை திருடி சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எங்கள் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், இந்த திருட்டு தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விவசாய பம்பு செட்டுகளை உடைத்து மின் மோட்டார், காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...