நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 53 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து நேற்று முன்தினம் மாலை இளைஞர் காங்கிரசை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள், காவல்துறை அனுமதியின்றி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.
காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலமாக சென்றவர்கள் திடீரென அந்த சாலையில் உள்ள பாஜ மாவட்ட அலுவலகம் முன் அமர்ந்து மறியல் செய்து, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கிருந்த பாஜ நிர்வாகிகள் காங்கிரசாருடன் வாக்குவாதம் செய்தனர். திடீரென இரு தரப்புக்கும் கை கலப்பு ஏற்பட்டு, சரமாரியாக கற்களை வீசினர். இரு தரப்பை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கோட்டார் போலீசார், பாஜ புகாரின்படி இளைஞர் காங்கிரசை சேர்ந்த 31 பேர் மீதும், காங்கிரஸ் புகாரின் பேரில் பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் காங்கிரஸ் கட்சி தரப்பில் டைசன், ஜோஸ் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜ தரப்பில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இரு கட்சி அலுவலகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டத்தில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
- தப்பி ஓட முயன்ற பா.ஜ. மாவட்ட தலைவரை விரட்டி பிடித்த போலீஸ்
மோதல் தொடர்பாக குமரி மாவட்ட பாஜ தலைவர் தர்மராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தர்மராஜை தேடி வந்த நிலையில் ,அவர் தோட்டியோடு அருகே காரில் செல்வதாக தகவலறிந்து போலீசார் விரட்டி சென்று காரை சுற்றி வளைத்து தர்மராஜை கைது செய்து மாஜிஸ்திரேட் தாயுமானவர் முன்பு ஆஜர் படுத்திபாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post நாகர்கோவிலில் பா.ஜ – காங்கிரஸ் மோதல் 53 பேர் மீது வழக்குப்பதிவு: 13 பேர் கைது appeared first on Dinakaran.