×

அன்று வெளிநாட்டில் மெக்கானிக்… இன்று நாகர்கோவிலில் இயற்கை விவசாயி!

இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு என்ற பதங்கள் இன்றைய இளம் தலைமுறையை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதனால் ஐடி நிறுவனங்களில் வேலை செய்த பல பட்டதாரிகள் மன அழுத்தம் காரணமாக வேலையை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்குகிறார்கள். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்து நிம்மதியாக வாழலாம் என விமானத்திற்கு டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வரிசையில் நாகர்கோவில் அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்த பழனி என்பவர் வெளிநாட்டில் செய்த மெக்கானிக் வேலையை உதறிவிட்டு, சொந்த ஊருக்கு வந்து இயற்கை விவசாயத்தில் இறங்கியிருக்கிறார். பாரம்பரிய நாட்டு இனமான காங்கேயம் மாடுகளை வளர்த்து மண்புழு உரம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், சாணத்தில் தயாரிக்கும் விபூதி என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார். அதோடு பாரம்பரிய நெல் ரகங்களையும் விளைவித்துவருகிறார். ஒரு காலைப்பொழுதில் பழனியை சந்தித்தோம்.

“பிபிஏ படித்திருக்கிறேன். அதற்கு முன்பு திருச்செந்தூரில் ஐடிஐ மெக்கானிக்கல் பிரிவில் படித்தேன். 2009ம் ஆண்டு வரை சென்னையில் வேலை செய்த நான் பின்னர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றேன். அங்கு மெக்கானிக் தொழில் செய்துவந்தேன். கடந்த 2018ம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு வர்மக்கலை வைத்தியரின் வீடியோவை பார்த்தேன். 3 மாத காலம் இயற்கை உணவுகளை உண்டால், பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என கூறியிருந்தார். தொடர்ந்து அவரது வீடியோக்களை பார்த்தேன். அப்போதுதான் இயற்கை விவசாயத்ைத செய்து, அதன் மூலம் நோய்நொடி இல்லாமல் வாழலாம் என முடிவு செய்து வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்தேன். இங்கு எனக்கு சொந்தமாக அரை ஏக்கர் வயல், முக்கால் ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. பல இயற்கை விவசாயிகளின் வழிகாட்டுதலோடு, விவசாயத்தில் இறங்கிவிட்டேன்.

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால், நம்மிடம் நாட்டுப்பசு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்காக நான் காங்கேயம் பசு ஒன்றை ரூ.8 ஆயிரம் கொடுத்து வாங்கி வளர்த்தேன். தற்போது 8 பசு மாடுகள் வளர்த்து வருகிறேன். விவசாயத்திற்கு தேவையான உரங்கள் நான் வளர்க்கும் பசுக்களில் இருந்து கிடைக்கிறது. 8 பசு மாடுகளில், 2 காங்கேயம் பசுக்கள். இதில் உள்ள சாணத்தில் மைக்ரோ நுண்ணுயிர் சத்து அதிகமாக இருக்கும். நான் வயலில் காட்டுயானம், கட்டிசம்பா, பூங்கார், கருங்குருவை, தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவருகிறேன். இதில் தூயமல்லி அரிசி மட்டும் வெள்ளை நிறமாகவும் மற்றவை சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

பாரம்பரிய நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியில் இரும்புச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கும். காட்டுயானம் நெல் ரகத்தில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். இதனால் பாரம்பரிய நெல்லிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் நான் உற்பத்தி செய்யும் நெல்லை வீட்டின் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளவற்றை அரிசியாக்கி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்கிறேன். எனது தொடர்பில் 3 ஆயிரம் இயற்கை விவசாயிகள் இருக்கிறார்கள்.

அவர்களிடம், எனக்குத் தேவையான விதைநெல்லைக் கேட்டு வாங்குவேன். அவர்களிடம் இருந்து வாங்கும் 2 கிலோ விதை நெல்லிற்கு அறுவடை முடிந்தவுடன் 4 கிலோ விதை நெல்லாக திருப்பிக் கொடுத்து விடுவேன். இதுபோல் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். மண்புழு உரம் தயாரித்தும் விற்பனை செய்கிறேன். ஆண்டுதோறும் இரண்டரை டன் மண்புழு உரம் தயாரித்து எனது விளை நிலத்திற்கு ஒரு டன் எடுத்து, மீதமுள்ள ஒன்றரை டன் மண்புழு உரம் விற்பனை செய்கிறேன். மண் புழு உரம் தயாரிக்க பெரிய 2 தொட்டி கட்டியிருக்கிறேன். இதில் சாணக்கழிவு, மரக்கழிவு போன்றவற்றை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு தொட்டியில் போட்டுள்ள உரத்தின் வெப்பநிலையை பார்க்க வேண்டும். வெப்பநிலை குறைந்தவுடன் மண் புழுக்களை உரத்தில் இட வேண்டும். 60வது நாளில் மண்புழு உரம் கிடைக்கும். இதுபோல் பஞ்சகவ்யம், கனஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம் ஆகியவை மண்ணில் உள்ள நுண்ணுயிர்ச் சத்துக்களை பிரித்து பயிர்களுக்கு கொடுக்கும். மண்ணில் சுமார் 15 அடிக்கு கீழ் இருக்கும் மண்புழுக்களை மேலே கொண்டுவரும். இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாக இருப்பதோடு, நன்மை தரும் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகரிக்கும். இயற்கை விவசாயம் செய்வதில் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது. வீட்டுச் செலவு போக வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. எனது மனைவி சத்யா உறுதுணையாக இருக்கிறார்’’ எனக் கூறும் பழனி, அவர் தயாரிக்கும் சில இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் தருகிறார்.

நுண்ணூட்ட உரம்

10 லிட்டர் பஞ்சகவ்யம் தயாரிக்க 500 மில்லி நெய், ஒன்றரை லிட்டர் கோமியம், 3 கிலோ சாணம், இரண்டரை கிலோ தயிர், பால் இரண்டரை லிட்டர் ஆகியவற்றை பாத்திரத்தில் இட்டு, அதனை 21 நாட்கள் கலக்கி விட வேண்டும். அதன்பிறகு பஞ்சகவ்யம் கிடைக்கும். இதனை நாம் 6 மாதகாலம் வைத்து பயன்படுத்தலாம்.300 மில்லி பஞ்சகவ்யத்தில் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து நாம் பயன்படுத்த வேண்டும். மீன் அமினோ அமிலம் தயாரிக்க சர்க்கரை (வெல்லம்) மற்றும் மீன் தேவை. எவ்வளவு சர்க்கரை சேர்க்கிறோமோ, அதே அளவு மீன் சேர்க்க வேண்டும். இரண்டையும் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவிட வேண்டும். 20 நாட்கள் கடந்து மூடியை திறந்தால், திரவம் போன்ற மீன் அமினோ அமிலம் கிடைக்கும். இதனை எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் வைத்து பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும்போது 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து பயன்படுத்த வேண்டும். கனஜீவாமிர்தம் தயாரிக்கும்போது சாணம் 100 கிலோ, இரட்டை விதை கொண்ட பயறு வகைகளில் ஏதாவது ஒரு பயறின் மாவு 2 கிலோ, 2 கிலோ சர்க்கரை (வெல்லம்), 5 லிட்டர் கோமியம் ஆகியவற்றை கலந்து வெயில், தண்ணீர் படாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கனஜீவாமிர்தத்தை ஒரு டன் உரம் பயன்படுத்தும் இடத்தில் 100 கிலோ பயன்படுத்தினால் போதுமானது.

பயிர்களைப் பூக்க வைக்கும் தேமோர் கரைசல்

பயிர்கள் சாகுபடி செய்து பல ஆண்டுகள் ஆனபிறகும் பூக்காமல் இருந்தால் தேமோர் கரைசலைப் பயன்படுத்தலாம். பயிர்கள் பூக்கத் தொடங்கிவிடும். தேமோர் கரைசலை தயாரிக்கும்போது, தேங்காயில் இருந்து பூ எடுத்து அதனை பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தேங்காய்ப்பால் எடுக்கிறோமோ அதே அளவு புளிச்ச மோரை சேர்க்க வேண்டும். 3 நாட்கள் கடந்த பிறகு தேமோர் கரைசல் ரெடியாகிவிடும். அரை லிட்டர் தேமோர் கரைசலில் 10 லிட்டர் தண்ணீரை சேர்த்து பூக்காத மரம், செடிகளில் வேர்ப்பகுதி அல்லது கொண்டைப் பகுதியில் விடும்போது பலன் கிடைக்கும்.
தொடர்புக்கு:
என்.பழனி 96293 80103.

மாட்டுத்தீவனத்தில்கவனம் தேவை

பொதுவாக மாடுகளுக்கு கொடுக்கும் அடர்தீவனத்தில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஆனால் அடர் தீவனம் மட்டும் கொடுப்பதால் சத்துகள் கிடைத்தாலும் வயிறு நிறைவு பெறாது. மேலும் வயிறு கட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. வைக்கோல், புற்கள் ஆகியவை கொடுக்கும்போது அதில் நீர்ச்சத்தும் இருப்பதால் வயிறு நன்கு நிறைவு பெற்ற உணர்வு ஏற்படும். உலர் தீவனம் பால் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நல்ல ஆரோக்கியத்திற்கு பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம் ஆகியவை தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும்.

விவசாயிகள் குழு

நாவல்காடு பகுதியில் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து துளசி அங்கக வேளாண் இடுபொருள் குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் 16 விவசாயிகள் உள்ளனர். இந்தக் குழுவின் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதையொட்டி கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்கி ஊக்குவித்துள்ளது. இந்தக் குழுவைப்போல் திருவட்டாரில் செயல்படும் ஒரு குழுவிற்கும் ரூ.1 லட்சம் மானியம் கிடைத்துள்ளது.

The post அன்று வெளிநாட்டில் மெக்கானிக்… இன்று நாகர்கோவிலில் இயற்கை விவசாயி! appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...