×

மர்மங்கள் நிறைந்த நிலவின் தென் துருவம்: பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றத்தால் உருவான ஐஸ் கட்டிகள் உருக தொடங்கி உள்ளது; விண்வெளி ரகசியங்களை ஆராயும் ரோவர்

சென்னை: மர்மங்கள் நிறைந்த நிலவின் தென்துருவ பகுதியில், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றத்தால் அடியாழத்தில் ஐஸ் கட்டிகள் சில உருகியுள்ளது. இதுபற்றி விண்வெளி ரகசியங்களை தற்போது நிலவில் கால் பதித்துள்ள பிரக்யான் ரோவர் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நிலவு தொடர்பான ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தை இந்தியாவின் சந்திராயன்-3 ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்த விண்கலமும் இந்த பகுதிக்கு வெற்றிகரமாகச் சென்றதில்லை. அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அப்போலோ விண்கலன்கள் அனைத்தும் வடக்கே பூமியின் பாதைக்கு அருகில் உள்ள இடங்களுக்கு தான் சென்றன. அங்கு தரையிறங்கும் தளங்கள் ஒப்பீட்டளவில் மென்மையான நிலப்பரப்பு மற்றும் சூரிய ஒளியைக் கொண்டிருந்தன.

ஆனால், நிலவின் தென் துருவத்தின் நிலப்பரப்பு அதிக மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேலும், சூரியனில் இருந்து வரும் ஒளி கடுமையான கோணத்தில் வரும். இப்படிப்பட்ட தென் துருவத்தில் தான் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்துள்ளது. இஸ்ரோவின் சந்திராயன்- 3 மூலம் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலவில் களமிறங்கி உள்ளது. எனவே, நிலவின் தென் துருவம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது, நிலவின் தெற்கு பகுதி என்பது மைனஸ் 240 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள பகுதியாகும். 2 பில்லியன் ஆண்டுகளாக, கிட்டத்தட்ட நிலவு தோன்றிய காலத்தில் இருந்தே நிலவின் இந்த பகுதியில் பெரிதாக சூரிய வெளிச்சம் படவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதன் கோணம் காரணமாக 10 சதவிகிதம் அளவில் மட்டுமே சூரிய வெளிச்சம் இங்கே உள்ளது. அதனால் இங்கே தண்ணீர் உறைந்து உள்ளே காணப்படுகிறது. அதாவது உள்ளே ஐஸ் பாறைகளாக தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கண்டுபிடிக்கவே நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவின் விக்ரம், பிரக்யான் சந்திராயன்-3 மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் அலுமினியம், பொட்டாசியம், மக்னீசியம், சிலிக்கான், இரும்பு போன்ற கனிமங்கள், கெமிக்கல்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிய அளவில் உதவும். விண்வெளியில் வேதி பொருட்கள் எப்படி இயங்குகின்றன. அதை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை கண்டறிய முடியும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவை உதவியாக இருக்கும்.

அதோடு, நிலவின் தென் பகுதி உருவான காலத்தில் இருந்து அப்படியே மாறாமல் உள்ளது. இந்த பகுதி உறைந்து காணப்படுவதால் காலப்போக்கில் இங்கே எதுவுமே மாறவில்லை. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிலவின் தோற்றத்தை ஆய்வு செய்ய முடியும். நிலவின் தென் பகுதியில் உள்ள குழிகளில் 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படவில்லை. லேசான மேற்பரப்பில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. காரணம் நிலவு அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. இதனால் சூரியனின் ஒளி, நிலவின் தென் பகுதியில் படுவதில்லை. இதனால் நிலவின் தென் பகுதி இன்னமும் ரகசியமாகவே உள்ளது.

இங்கே வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இவை எல்லாம் கருப்பான, ஐஸ் படிந்த, ரகசியமான, மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் ஆகும். இதனால் தான் நிலவின் தென் துருவம் எப்போது சுவாரசியமும், பல புதிர்களும் நிறைந்த ஒன்றாக உள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட சிறிய மாற்றமும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். முதலில் நிலவின் முழு தென் பகுதி முழுவதும் சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் நிலவின் சுற்றுப் பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால், நிலவு லேசாக சாய்ந்தது. இதனால் நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. இந்த இடத்தை தான் தற்போது சந்திரயான்-3 ஆராய போகிறது. இங்கே சூரிய ஒளியே படாத குழிகளும் உள்ளன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம் தான், நிலவில் தற்போது நடக்கும் ஆராய்ச்சிக்கு எல்லாம் முக்கிய காரணமாக உள்ளது. அப்போது ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகி உள்ளது. இது அங்கு தண்ணீரை உருவாக்கியது. இந்த பகுதிகளை ஆய்வு செய்தால் மனித குல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் பல தெரிய வரும் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ரகசியம் மிகுந்த இந்த பகுதிகளில் தான் தற்போது பிரக்யான் ரோவர் தனது ஆராய்சியை தொடங்கியுள்ளது.

* பொருளாதார ரீதியாகவும் உதவும்
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘நிலவின் தென் துருவ பகுதிகளில் தண்ணீர் உள்ளது என்று ஏற்கனவே சந்திராயன்-1 உறுதிபடுத்தியுள்ளது. எனவே அங்குள்ள தண்ணீரை எடுக்கும் பட்சத்தில் இஸ்ரோ அதை விண்வெளி பயணங்களில் பயன்படுத்த முடியும். நிலவில், உலக நாடுகள் எதிர்காலத்தில் விண்வெளி மையம் அமைக்கலாம். இதற்கான வரிசையில் இஸ்ரோவும் களம் இறங்கி உள்ளது. எனவே, நிலவில் தண்ணீரை கண்டுபிடிக்கும் பட்சத்தில் இந்தியா அந்த வளத்தை முதல் ஆளாக பயன்படுத்த தொடங்கலாம். எண்ணெய் வளம் போல நிலவில் தண்ணீர் வளத்தை இந்தியா பயன்படுத்தலாம். இதுபோக சந்திரயான் மூலம் தான் நிலவில் களமிறங்க முடியும் என்பதை இஸ்ரோ நிரூபிக்க முடியும். அதாவது நிலவிற்கு வேறு நாடுகளின் திட்டங்களை அனுப்ப இஸ்ரோ பயன்படுத்தப்படும். பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு இது பெரிய அளவில் உதவும்’’ என்றார்கள்.

The post மர்மங்கள் நிறைந்த நிலவின் தென் துருவம்: பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றத்தால் உருவான ஐஸ் கட்டிகள் உருக தொடங்கி உள்ளது; விண்வெளி ரகசியங்களை ஆராயும் ரோவர் appeared first on Dinakaran.

Tags : Moon ,South Pole ,CHENNAI ,pole ,Dinakaran ,
× RELATED நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ...