×

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரண பொருள் விநியோகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 6.12.2023 முதல் இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்களின் வாயிலாக பெறப்படும் நிவாராண பொருட்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால்பவுடர், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 82,400 பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகள், நைட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குவளைகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 34 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்கள், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள், குன்றத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிவாரண பொருட்கள் வழங்க ஏதுவாக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் மூலம் தோராயமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பெறப்பட்டு அவையும் தேவையான பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரண பொருள் விநியோகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mikjam storm ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Metropolitan Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மெட்ரோ நிலையங்களில்...