×

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை : நடிகர் மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சை த்ரிஷாவே கண்டித்திருந்தார். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா, தன்னை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி என்.சதீஷ்குமார், பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென நடிகர் மன்சூர் அலிகான் உணர்ந்து கொள்ள வேண்டும். மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?. மன்சூர் அலிகான் தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுகிறார். தாம் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்?. என வினவினார்.

இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்சூர் அலிகான் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்வதாகவும், அவரை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை நடிகை த்ரிஷா நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரே அமைதியாக உள்ள நிலையில், தற்போது எதற்கு மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என நடிகை த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post நடிகர் மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Trisha ,Mansoor Ali Khan ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED சும்மா வேடிக்கை பார்க்க...