×

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்வு மொழி சிறுபான்மையினருக்கு விலக்களிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற இருந்த கட்டாய தமிழ் தகுதித்தேர்வு, புயல், மழையால் பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வில் தமிழ் கட்டாய தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ் கட்டாய தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து பிரதான தேர்வுக்கு அனுமதி கோரியும், கட்டாய தமிழ் தகுதித் தேர்வு எழுத வகை செய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் 2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க கோரியும் மொழிச்சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், கடந்த 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் அரசுப் பணிக்கு தகுதி பெற்று தமிழ் மொழியில் தகுதி பெற்றிருக்காவிட்டால் பணி நியமனத்துக்கு பின் இரு ஆண்டுகளில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மொழிச் சிறுபான்மையினர் அரசுப் பணி பெறும் வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கட்டாய தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி அரசுக்கு முறையிட்டும், எந்த பதிலும் இல்லை. தெலுங்கு மொழியில் படித்த மனுதாரர்கள், தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கே.இளங்கோ வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், அதன் அடிப்படையில் மூன்று போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். மனுதாரர்களின் கோரிக்கையை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். இதில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர்கள் தேர்வில் பங்கேற்கலாம். இந்த மனுவுக்கு மார்ச் 7ம் தேதிக்குள் தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாய தமிழ் தேர்வு மொழி சிறுபான்மையினருக்கு விலக்களிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை