×

மணலி புதுநகர் அருகே பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே எலந்தனூரில் சமீம் என்பவருக்கு சொந்தமான பெயின்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து பெயின்ட் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் அதை தரம் பிரித்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். பெயின்ட் என்பதால், அனைத்து வகையான பெயின்ட்டுகளிலும் தீ மளமளவென பரவியது.

இதனால் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது. இந்த தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர், மணலி, மீஞ்சூர், எண்ணூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் அங்கிருந்த பெயின்ட் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது.

The post மணலி புதுநகர் அருகே பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் appeared first on Dinakaran.

Tags : Manali Pudunagar ,Thiruvottiyur ,Sameem ,Elantanoor ,
× RELATED சென்னை மணலி புதுநகர் அருகே...