சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக-தேமுதிக இடையே நாளை 2 ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. தேமுதிக மற்றும் பாமக இரு கட்சிகளும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளை கேட்பதால் எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்பதில் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் நாளைய தினம் அதிமுக மற்றும் தேமுதிக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்காக அதிமுகவின் தலைமை முன்வந்துள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளை ஒதுக்குவது உறுதி செய்யப்பட்டாலும் கடலூர் மற்றும் திருச்சியை கூடுதலாக ஒதுக்கலாம் என்று அதிமுக தரப்பில் தற்போது முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் தேமுதிகவில் மூத்த தலைவரான சுதீஷ் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்திருப்பதாகவும் இதனால் கள்ளக்குறிச்சி தொகுதியை அதிமுகவிடம் விட்டு கொடுப்பதென்று தேமுதிக தரப்பில் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் இடம் என்பது கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக உள்ள நிலையில் மக்களவை பதவி என்பதை தேர்தலுக்கு பின்பாக பார்த்து கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் கூறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 2ம் கட்டமாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன என்பதை நாளை அதிகார பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post மக்களவை தேர்தல்: அதிமுக-தேமுதிக இடையே நாளை 2 ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.