×

இன்ஸ்டாகிராமில் லைக் பெறுவதற்காக தோழியுடன் பைக்கில் ஆபத்தான பயணம்: விபரீத வாலிபருக்கு வலை

திருமலை: இன்ஸ்டாகிராமில் லைக் பெறுவதற்காக தோழியை பைக்கில் அமர வைத்து ஆபத்தான முறையில் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.இன்றைய நவீன யுகத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் பெறுவதற்காக பலர் விபரீத சாகசங்களை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பல நேரங்களில் விபரீதங்கள், மரணத்தில் முடிவதை பலர் அறிந்தாலும், அதே தவறை ரிஸ்க் எடுத்து செய்வதை பல இளைஞர்கள் தங்கள் சாதனையாக நினைக்கின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக இரவில் அதிவேக பயணத்துடன் பைக்கில் வீலிங் செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.இதேபோல் ஐதராபாத் மாதப்பூர், கச்சிபவுலி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர், தனது தோழியை பைக்கில் அமர வைத்து கொண்டு ஆபத்தான முறையில் (முன்சக்கரத்தை தூக்கியபடி) பயணித்தார்.

சுமார் 2 நிமிட காட்சியை அவர் வைரலாக்கி உள்ளார். இதில் அந்த பெண் தோழி, வாலிபரை இறுக்கமாக பிடித்து கொண்டு கூச்சலிட்டபடி செல்கிறார். இந்த காட்சிகள் நள்ளிரவு 12 மணியளவில் எடுத்ததாக கூறி அந்த வாலிபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலர் கண்டித்துள்ளனர்.குறிப்பாக `வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டீங்களா?’ எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் இதுபோன்ற விபரீத சாகசம் குறித்து ஐதராபாத் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு நேற்று சென்றது. அதன்பேரில் போக்குவரத்து போலீசார் அந்த வாலிபர் மற்றும் அவருடன் பயணித்த தோழி குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராமில் லைக் பெறுவதற்காக தோழியுடன் பைக்கில் ஆபத்தான பயணம்: விபரீத வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,
× RELATED திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது