×

காங். எம்எல்ஏ உதவியாளர் ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல்: ஒன்றரை மணி நேரத்தில் அதிரடியாக மீட்டது போலீஸ்

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட காங். எம்எல்ஏவின் உதவியாளரை ஒன்றரை மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியை சேர்ந்தவர் மரியராஜ் (42). தற்போது ஆழ்வார்திருநகரியில் வசித்து வருகிறார். இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளராகவும், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

நேற்று அதிகாலை காரில் பெருங்குளம் சென்று விட்டு ஆழ்வார்திருநகரியில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சிவராமமங்கலம் பகுதியில் 1.30 மணியளவில் வரும்போது மரியராஜின் கார் பழுதடைந்து நின்றது. அப்போது அங்கு நின்றிருந்த சிவராமமங்கலத்தை சேர்ந்த வீரசங்கிலி(50), சுங்கநாதபுரம் முத்துராமலிங்கம் மகன் பரமசிவன்(27) மற்றும் சிலர் சேர்ந்து மரியராஜை சுற்றி வளைத்து பேச்சு கொடுத்து உள்ளனர். திடீரென அவரை சரமாரியாக தாக்கி அருகிலுள்ள வாழை தோப்பிற்குள் கடத்திச் சென்றனர். மேலும் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் கொடுத்தால்தான் மரியராஜை விடுவிப்போம் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மரியராஜின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பெபின் செல்வ பிரிட்டோ, செல்வம் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். சிவராமமங்கலம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அருகிலுள்ள வாழை தோப்பிற்குள் போலீசார் வருவதை பார்த்ததும் கும்பல் தப்பியோடியது. போலீசார் விரட்டிச் சென்று வீரசங்கிலியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அங்கு காயங்களுடன் மீட்கப்பட்ட மரியராஜை, சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தப்பியோடிய பரமசிவன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலை 1.40 மணியளவில் எம்எல்ஏவின் உதவியாளர் கடத்தப்பட்ட தகவல் கிடைத்து ஒன்றரை மணி நேரத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிகாலை 3 மணிக்குள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

The post காங். எம்எல்ஏ உதவியாளர் ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல்: ஒன்றரை மணி நேரத்தில் அதிரடியாக மீட்டது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Kong ,Srivaikundam ,MLA ,
× RELATED காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர்...