×

ஜேடர்பாளையத்தில் தொடரும் பதற்றம் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி 500 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்; எஸ்.பி., நேரில் விசாரணை

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் பகுதியில் தொடர் அசம்பாவித சம்பவங்களால் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில், தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், கடந்த மார்ச் 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 17 வயது சிறுவனை, ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள வெல்லம் உற்பத்தி ஆலை கொட்டகையில் வேலை செய்யும் 4 தொழிலாளர்கள், அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், ரோகி(எ) ராஜேஷ்(19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைதொடர்ந்து 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். 12 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி, 16 வெல்ல உற்பத்தி ஆலைகளின் அருகில் உயர் கோபுரங்கள் அமைத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே உயிரோடு கொளுத்தப்பட்ட 4 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த ஆலையின் உரிமையாளரான முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் வாழை தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள், 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி சாய்த்தனர். அங்கிருந்த பாக்கு மரக்கன்றுகளும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. தகவலின்படி எஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை கண்டறிய தமிழக காங்கிரஸ் சார்பில் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

The post ஜேடர்பாளையத்தில் தொடரும் பதற்றம் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி 500 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம்; எஸ்.பி., நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jedarbapalayam ,Atakasam ,S. P. ,Paramativelur ,Jedarbalayam ,Jedarbambayam ,
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...