திருப்பூர்: ‘இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேலம் இளைஞரணி மாநாடு திருப்புமுனையாக அமையும்’ என அமைச்சர் உதயநிதி தெரிவித்து உள்ளார். திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர் கூட்டம் திருப்பூர் அருகே உள்ள எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, தாராபுரம் திருப்பூர் ரோடு கொடுவாய் விவேகானந்தபள்ளி அருகில் நேற்று காலை நடந்தது. இதில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கல்வி உரிமை, பொருளாதார உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. அனைத்து உரிமைகளையும் நாம் இழந்துள்ளோம். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவே சேலம் மாநாடு. சேலம் மாநாட்டை இந்திய வரலாற்றிலேயே எழுச்சி மாநாடாக கொள்கை மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேலம் இளைஞரணி மாநாடு திருப்பு முனையாக இருக்கும். பாஜ 9 ஆண்டுகளில் என்ன செய்தது? மோடி எங்கு சென்றாலும் என் நினைவாக இருக்கிறார். ம.பி சென்றபோது கூட என்னைபற்றி பேசுகிறார். நான் பேசாததை பேசுவதாக பரப்பி வருகிறார்.
கொள்கையைத்தான் பேசினேன். இதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. 9 வருடத்தில் ஒன்றிய அரசு செலவு தணிக்கையை சிஏஜி வெளியிட்டது. இதில் 7.5 லட்சம் கோடிக்கு ஒன்றிய அரசிடம் கணக்கு இல்லை. செய்து முறைகேடு செய்துள்ளனர். பாஜ அரசால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே. விமானி இல்லாமல் கூட செல்வார் அதானி இல்லாமல் செல்லமாட்டார் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
ரெய்டை கண்டால் பயப்பட நாங்கள் எடப்பாடி இல்லை
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘சேலம் மாநாட்டில் பல்வேறு விசயங்கள் குறித்து பேசவுள்ளோம். அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றி வைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெறுகிறது. 17 சிறப்பு தலைப்புகளில் சிறப்பாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை, நம் தமிழ்நாடு காவல்துறையே சிறையில் அடைத்துள்ளனர். ரெய்டை கண்டால் பயப்பட நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமி கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேலம் இளைஞரணி மாநாடு திருப்புமுனையாக அமையும்: அமைச்சர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.